கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடான தென்கொரியாவில் உலகின் பிற நாடுகளை போல வயது கணக்கிடும் நடைமுறை இல்லை. அதாவது ஒரு குழந்தை பிறந்தது என்றால் அன்றைய தினமே ஒரு வயதாக எடுத்துக் கொள்ளப்படும்.

அதேபோல ஜனவரி 1 ஆம் திகதி ஒரு வயது கூடி விடும். எளிதாக சொல்வது என்றால் புத்தாண்டு முந்தைய தினத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று எடுத்துக் கொண்டால் பிறந்த தினம் ஒரு வயதாகவும், புத்தாண்டு தினமாக ஜனவரி 1 ல் ஒரு வயது என மொத்தம் அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது என்று எடுத்துக் கொள்வார்கள்.

தென்கொரியாவில் 80-90 சதவிகிதம் பேர் அந்த நாட்டு பாரம்பரிய முறையிலான இந்த வயது முறையைதான் பின்பற்றுகின்றனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் முறையை பின்பற்ற தென்கொரிய அரசு முடிவு எடுத்துள்ளது. வயது கணக்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதால் அதை சரிசெய்யும் விதமாக இந்த முறைக்கு மாற தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் தென்கொரியாவில் பலருக்கும் ஒரு வயது முதல் இரண்டு வயது குறைய இருக்கிறதாம். எனினும், தற்போது கொண்டு வரப்படும் மாற்றத்தால் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட இருக்கிறது. அதாவது பென்ஷன் தாரர்கள் மற்றும் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த வயது எண்ணிக்கையில் குழப்பங்கள் ஏற்பட போகிறது. அதை எப்படி அரசு கையாள போகிறது என்று தெரியவில்லை.

தென்கொரியாவில் பொதுவாக யாரிடமாவது வயது எத்தனை என்று கேட்டால் பிறந்த வருடத்தை தான் சொல்வார்கள். தென்கொரியாவில் கடந்த 1960 ஆம் ஆண்டே சர்வதேச முறையிலான வயது கணக்கிடும் முறை பின்பற்றப்படுகிறது.

ஆனாலும் பெரும்பாலான தென்கொரிய மக்கள் தங்கள் பாரம்பரிய முறையைதான் பின்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் தென்கொரியாவில் பாரம்பரிய முறையிலான வயது கணகீட்டு முறையை ரத்து செய்து விட்டு சர்வதேச முறையை பின்பற்ற சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.