ரஷ்யா - உக்ரைன் இடையே தொடங்கிய போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில்
ரஷ்யாவிற்குள்ளே உள்நாட்டு போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டது.

அதாவது, ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை அந்நாட்டு ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக திரும்பியது.

உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த வாக்னர் கூலிப்படையினர் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படைகளை நகர்த்த இருப்பதாக அறிவித்தனர்.

மேலும் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரை கைப்பற்றிய வாக்னர் படையினர், அங்குள்ள ரஷியாவின் தெற்கு பிராந்திய ராணுவத் தலைமை அலுவலகத்தையும கைப்பற்றினர். வாக்னர் படையின் இந்த செயலை முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்திருந்தார்.

மேலும் துரோகம் பாதையில் சென்று தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்‌ என புடின் எச்சரித்திருந்தார். வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் அதிபர் புடின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தனது படையை திரும்ப பெறுவதாக வாக்னர் படையின் தலைவர் பிரிக்கோஜின் அறிவித்தார்.

மேலும் பிரிக்கோஜின் மற்றும் ரஷ்ய அரசு இடையே பதட்டத்தை தணிக்கும் வகையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் பிரிக்கோஜின் பெலாரஸ் நாட்டிற்கு செல்வதாகவும் அவர் மீதான குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுள்ளதால் அவர் மீதான குற்ற வழக்குகள் மற்றும் அவரது படையினர் மீதான வழக்குகள் அனைத்தையும் முடித்து வைப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் எந்த குற்ற வழக்குகளும் அவர்கள் மீது சுமத்தப்படாது என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உக்ரைனுடன் போர் நடந்து வரும் நிலையில் உள்நாட்டு கிளர்ச்சியும் வெடித்திருந்தால் புடின் அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கும். ஆனால் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ரஷ்யாவில் வெடிக்க இருந்த உள்நாட்டு கிளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.