தமிழ் சினிமாவில் தனது டைமிங் கவுண்டராலும் நக்கல் கலந்த காமெடியாலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் கோலோச்சியவர் நடிகர் கவுண்டமணி.

இவரது காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செந்திலுடன் கவுண்டமணி நடித்த காட்சிகள், எவர்கிரீன் காம்போவாக காலம் கடந்து நிற்கிறது.

பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த கவுண்டமணி 2015 இல் வெளியான 49-ஓ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்த கவுண்டமணி சில காரணங்களால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில், கவுண்டமணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை 'பேய காணோம்' படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்க யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், ராதாரவி, சித்ரா லட்சுமணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. 

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.