கரப்பான் பூச்சியுடன் வடையை விற்ற உணவகம் மற்றும் சமையற்கூடத்திற்கு முறையே 60,000 ரூபா 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம்  04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த உணவகம், சம்பவ தினமும் மறுதினமும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற்கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த டிசம்பர் மாதம் 06ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சட்டரீதியாக முத்திரை வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது. இதனையடுத்து உணவகமும், சமையற்கூடமும் பொது சுகாதார பரிசோதகரால் சட்டரீதியாக முத்திரை வைத்து மூடப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம்  நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000 ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.

இதையடுத்து சுமார் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின் கட்டளையினையடுத்து இன்று திறக்கப்பட்டன.