எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விழாவிற்குத் தேவையான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை திறைசேரி ஏற்கனவே செய்துள்ளதாகவும், மேற்படி நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான செலவினங்களைக் குறைக்க அமைச்சு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பாக பிரதமரும், அமைச்சருமான தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு திங்கட்கிழமை  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 மேற்படி கொண்டாட்டத்திற்காக அந்தந்த நிறுவனங்களால் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் திட்டத்தில் அடங்கும்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது “நமோ நமோ மாதா, நூற்றாண்டிற்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
மேலும் விழாவை முன்னிட்டு நான்கு நாள் ஒத்திகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.