தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று (புதன்கிழமை) மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

 

அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளது.

 

கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீற்றர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீற்றர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீற்றர் தொலைவில் நகர்ந்து வருகிறது”  எனத்  தெரிவித்துள்ளது.