ஆக்லாந்தில் கும்பல் தொடர்பான குற்றங்களை பொலிஸார் தொடர்ந்து ஒடுக்கி வருகின்ற நிலையில் தற்போது கும்பல் உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஆரோன் ப்ராக்டர் கூறுகையில்...

கும்பல் தொடர்பான குற்றங்களை முறியடிப்பதற்கான காவல்துறையின் "ஆபரேஷன் கோபால்ட்" மூலம் கோடை காலம் முழுவதும் செயல்திறன் வாய்ந்த நடவடிக்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் Sandringham இன் Kiwitea தெருவில் உள்ள ஒரு வீட்டில் சப்ளை செய்வதற்காக வைத்திருந்த பல மெத்தம்பேட்டமைன் பொதிகளை பொலிஸார் மீட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் Commancheros கும்பலுடன் தொடர்புடைய 31 வயதுடைய ஆணும் 32 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டதுடன் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் Weymouth உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து Tribesmen கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது துப்பாக்கி, வீட்டில் தயாரிக்கப்பட்ட டேசர் மற்றும் வெடிமருந்துகள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் குறித்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக புரோக்டர் கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 36 வயதான அந்த நபர் Manukau மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார் என அவர் தெரிவித்தார்.