மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர் அந்த பள்ளியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

இந்நிலையில் பணத்தை திருடியதாக தனது மகளுக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவர வைத்ததாக விடுதி காப்பாளர் மீது சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை கூறியதாவது...

விடுதியில் மற்றொரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை 5-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து விடுதியின் பெண் காப்பாளர், மாணவியின் முகத்தில் கருப்பு நிற வண்ணம் பூசி பேய் போல் மேக் அப் போட்டு, மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளார்' என்று அவர் கூறினார்.

மகளை சந்திக்க விடுதிக்கு சென்றபோது தனக்கு நடந்த கொடூரம் குறித்து அவர் தெரிவித்ததாக மாணவியின் தந்தை கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பெண் விடுதி காப்பாளரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.