நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இதில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவம் கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது.

இதனை பூர்பிசவுக்கி கிராம கவுன்சில் தலைவர் ராம் பிரசாத் உபாத்யாய் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன.

இந்த நிலையில், உத்தரகாண்டில் இன்று காலை 6.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் பல இடங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன என மக்கள் கூறியுள்ளனர்.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியது.

கடந்த அக்டோபர் 19 ஆம் திகதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோன்று ஜூலை 31-ந்தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்நிலையில், நேபாளத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். உத்தரகாண்டிலும் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.