கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.

இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில் தொற்று எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது.

இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் ஒன்டாரியோ மாகாணத்தில் 688 பேரும், கியூபெக் மாகாணத்தில் 525 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 179 பேரும், ஆல்பெர்ட்டா மாகாணத்தில் 41 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று சாஸ்கத்சீவன் மாகாணத்தில் 6 பேரும், யுகோன் மாகாணத்தில் 2 பேரும் மற்றும் நோவா ஸ்காட்டியா, மணிடோபா மற்றும் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கனடாவின் நோயெதிர்ப்புக்கான தேசிய அறிவுறுத்தல் குழுவானது, தடுப்பு நடவடிக்கையாக குரங்கம்மை தடுப்பூசியை செலுத்தும்படி பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதிலும், அறிகுறிகள் அற்றவர்களுக்கே 2-வது டோஸ் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த குரங்கம்மை பாதிப்பு, நோய் தொற்று கொண்ட நபரிடம் நேரடியான தொடர்பு கொண்டிருத்தல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், மசாஜ் அல்லது பாலியல் உறவு வைத்தல் உள்ளிட்டவற்றால் பரவ கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.