தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையின் நகலை வழங்குவதற்காக அறிவிடப்படும் கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அட்டை தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக விநியோகிக்கப்பட்ட 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரந்தர சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

மோட்ட வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.