இந்தியாவில் புதுடெல்லியில் கடந்த ஏழு மாதங்களாக 'கோமா' நிலையில் இருந்த உத்தரப் பிரதேசப் பெண்ணுக்கு, புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷரைச் சேர்ந்த 23 வயதுடைய ஷாபியா என்ற பெண், கடந்த ஏப்ரலில் நடந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.

இதையடுத்து, அவர் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து நடந்த போது, அவர் 40 நாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கரு நல்ல ஆரோக்கியமாக இருந்தமையினால் கருவைக் கலைப்பது குறித்து குடும்பத்தாருடன் டாக்டர்கள் ஆலோசித்தனர் பின்பு கர்ப்பத்தை தொடர குடும்பத்தினர் முடிவு செய்தனர். 

இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கு, நான்கு முறை நரம்பியல் அறுவை சிகிச்சைகள் நடந்தன.

இந்நிலையில், கடந்த வாரம் சுகப்பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் அவர் கோமா நிலையிலேயே இருந்துள்ளார்.

கோமா நிலையில் இருந்தபோதும், சுகப்பிரசவம் நடந்துள்ளமை அபூர்வமானது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.