தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர்.

அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளிகளில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.