லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உட்பட பல பிரிவுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 30 மில்லியன் ரூபா பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவது பாரிய அநீதி என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் 16 மில்லியன் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணம் 8 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வைத்தியசாலையின் மின் கட்டணம் 13 மில்லியன் ரூபாவாக உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார் .

மருத்துவமனையின் துணை இயக்குநர் டொக்டர் சந்துஷ் சேனாபதியிடம் கேட்டபோது, ​​துண்டிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தில் ஒரு பகுதியைச் செலுத்திய பிறகு இணைப்பை மீள வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். எனினும் இது பாரதூரமான விடயம். அரசிடம் இருந்து ஒதுக்கீடுகள் அதிகரிக்காவிட்டாலும், மருத்துவமனை சிகிச்சை சேவைகள் அதிகரிப்பு, மின்கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால், எதிர்காலத்தில் மருத்துவமனை அதிக அளவில் மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சேனாபதி குறிப்பிட்டார்.

தினசரி 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாகவும், தினமும் 600 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும், அதிக அளவில் தீவிர மற்றும் பொது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் சந்துஷ் சேனாபதி சுட்டிக்காட்டினார். பொறுப்பு வாய்ந்த தரப்புகள் இந்த வைத்தியசாலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .