கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நிலையில், வௌிநாடு செல்வதற்கான தடைக்கு உட்படிருந்த முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வன் வெளிநாட்டுக் கல்விக்காக இங்கிலாந்து செல்லவும், வர்த்தகம் நிமித்தமாக இத்தாலி செல்லவும் அனுமதிக்குமாறு பிரேரணையை தாக்கல் செய்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், பத்து இலட்சம் ரூபா சரீர பிணையில் அவரை தற்காலிகமாக விடுவிக்க அனுமதித்தார்.

ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்திற்கான தடை நீக்கப்பட்டதுடன், குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பதிவாளருக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கு தொடர்பில் அவர் வெளிநாடு செல்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்குமா என நீதவான் வினவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றில் அறிவித்தது.

இந்த வழக்கில் ரோஹித அபேகுணவர்தன சந்தேகநபராக பெயரிடப்படவில்லை எனவும், விசாரணைக்கு உதவும் வகையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.