மாவீரர் தினக் கொண்டாட்டத்தைத் தடை செய்யும் வகையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு எதிராகவும் கோப்பாய்ப் பொலீசார் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

 

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளைக் கொண்டாடவுள்ளார்கள் எனத் தாம் சந்தேகிக்கும் நபர்களுக்கு எதிராக அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தடை செய்யும் உத்தரவை வழங்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோப்பாய்ப் பொலிசாரினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த வழக்கில் பொலிசாரினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளை இன்று (24) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கு வந்து தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முதல் மாலை முதல் தடையுத்தரவுக்கான கடிதங்கள் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வரிசையில், பத்திரிகையாளரான தே. பிறேமானந்துக்கு, த.காண்டீபனுக்கு எதிராகவும் கோப்பாய் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் - பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் மாவீர்ர் தினக் கொண்டாட்டத்துக்குத் தடை கோரி, பொலிசாரால் தொடுக்கப்பட்ட வழக்கிலும் வடமராட்சியைச் சேர்ந்த காண்டீபன் என்ற செய்தியாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிசாரினாலேயே அது மீளப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.