14ஆவது ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஏலம் நடைபெறுமா என்றே சந்தேகம் நிலவிவந்த நிலையில், தற்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.பி.எல். அணிகள் தங்கள் வசம் இருக்கும் வீரர்களை தக்க வைப்பதற்கும், விடுவிப்பதற்குமான அவகாசம் ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதுதொடர்பான வர்த்தக நடைமுறைகள் பெப்ரவரி 4ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு தொடருக்காக 8 அணிகள் 139 வீரர்களை தக்கவைத்துக் கொண்ட நிலையில், 57 வீரர்களை விடுவித்துள்ளன. அணிகள் பல முக்கிய வீரர்களை விடுவித்துள்ளதால் ஏலம் விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகின்றது.

வீரர்களை விடுத்த நிலையில், எதிர்வரும் ஏலத்தில் அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்திய மதிப்பில், 53.2 கோடி ரூபாய் கையிருப்புடன் பங்கேற்கிறது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 35.7 கோடி ரூபாவுடனும், ராஜஸ்தான் றோயல்ஸ் 34.8 கோடி ரூபாவுடனும், சென்னை சுப்பர் கிங்ஸ் 22.9 கோடி ரூபாவுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 கோடி ரூபாவுடனும், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 12.8 கோடி ரூபாவுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.8 கோடி ரூபாவுடனும் வருகின்றன. குறைந்தபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10.7 கோடி ரூபாவுடன் ஏலத்துக்கு வருகிறது.