அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக சிலி தேசிய அவசரகால மீட்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டார்டிகா கடலோர பகுதியில் உள்ள சிலி ராணுவ தளத்தில் உள்ளவர்களை மீட்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராணுவ தளம் பகுதியில் உள்ளவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

சிலி நாட்டின் மிகப்பெரிய படையான விமானப்படையின் தளம் அண்டார்டிகாவில் உள்ளது. இங்கு வீரர்கள் தங்குவதற்காக குடியிருப்புகள் கொண்ட கிராமம், மருத்துவமனை, பள்ளி, வங்கி, தபால் அலுவலகம் மற்றும் வழிபாட்டு தலம் உள்ளது. இந்த கிராமத்தில் கோடை காலத்தில் 150 பேரும், குளிர்காலத்தில் 80 பேரும் வசிக்கின்றனர்.