ஐபிஎல் 2022 இன் முதலாவது போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்த போதிலும் தனது அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் மனங்களை மீண்டும் கவர்ந்துள்ளார்.

முதல் போட்டியில் தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சினைத் தேர்வு செய்தார்.

அதன்படி ஆடிய சிஎஸ்கே அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியின் ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனியும், தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவும் இணைந்து ரன் சேர்த்தனர்.

இருவரும் மிக மிக நிதானமாகாவே ஆடி ரன்களைக் குவித்தனர். ஒரு கட்டத்தில், 100 ரன்களைத் தாண்டுமா என்ற நிலையும் உருவானது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தோனி, கடைசியில் சில ஓவர்களில் பவுண்டரிகள் அடித்து அசத்தினார். மொத்தம் 38 பந்துகள் சந்தித்த தோனி, 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்திருந்த தோனி, அதன் பிறகு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த தொடரின் போது, ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல், தோனியின் பேட்டிங்கும் இந்த இரண்டு சீசனின் போது, கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே, அணிக்கு தேவைப்படும் நேரத்தில், அரை சதமடித்து அசத்தலான ஆரம்பத்தை அளித்துள்ளார் தோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், அவர் அரை சதம் அடித்திருந்தது பற்றியும், ரசிகர்கள் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தோனியின் அரை சதத்தினை பாராட்டி, ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். அதில், "தோனி சிறப்பாக ஆடினார்.

தன்னுடைய ஆட்டத்தை மெதுவாக தொடங்கினார். ஆனால், அவரின் அனுபவம், அமைதி, பொது அறிவு ஆகியவற்றை கலந்து பயன்படுத்தியதால் தான், சிஎஸ்கே தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளது.

இந்த பிட்ச்சில், ரன்களைக் கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும்" என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இனி வரும் போட்டிகளிலும் தோனி இதை போன்று, தொடர்ந்து ஆடி, பழைய பார்முக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.