கூகுள் லூன் பலூன் வேலைத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அதன்படி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) கீழ் இருந்த இந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் இலங்கையில் இணையப் பயன்பாடு அடுத்து கட்டத்திற்கு சென்றிருக்கும்.

இருப்பினும் , அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சகோதரரை இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவராக நியமித்ததன் மூலம் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை தடுத்தார்.

 

கூகுள் லூன் தொழிநுட்பத்தை அன்று ஆரம்பித்திருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள தனிமைப்படுத்தல் காலத்தில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.

 

அன்று நாங்கள் ஆரம்பித்த கூகுள் லூனை செயற்படுதியிருந்தால், நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் 4ஜீ தொழிநுட்பத்தை இலவசமாக வழங்கி இருக்க முடிந்திருக்கும்.

 

இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை செயற்படுத்த இடமளிக்காமல் இல்லாமலாக்கிவிட்டார்.

 

எவ்வாறாயினும், இந்த திட்டம் வெற்றிகரமாக இருப்பதாக கூகிள் நிறுவனமும் கூறியது. ஆனால் அந்த நேரத்தில் இந்தத் திட்டத்திற்கு உள்நாட்டில் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.