பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யாரும் எதிர்ர்பாராத வகையில், வீரர்களைத் தேர்வு செய்து வருகிறது.

நேற்றைய தினத்தில், மொத்தம் 6 வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், உத்தப்பா, ஆசிப் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்களை எடுத்திருந்தது.

இதில், துஷாரைத் தவிர மற்ற 5 வீரர்களும், ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து ஆடியவர்கள் தான்.

புதிய வீரர்களை ஏலத்தில் இலக்காக கொள்ளாமல், மீண்டும் கடந்த முறை கோப்பையைக் கைப்பற்றிய அதே அணியைக் கொண்டு, தங்களின் அணியைக் கட்டமைத்து வருகிறது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு, கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

பிராவோ, ராயுடு உள்ளிட்ட சீனியர் வீரர்களை எடுத்த சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் தாங்கள் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த பாப் டு பிளஸ்ஸிஸை ஏலத்திற்கு முன்பாக, அணியில் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இது போக, ஏலத்திலும் அவரை எடுப்பதற்கான முயற்சிகளை சிஎஸ்கே மேற்கொள்ளவில்லை. இறுதியில் பெங்களூர் அணி, டுபிளஸ்ஸிஸை ஏலத்தில் எடுத்தது.

சிஎஸ்கேவின் முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனந்த்தை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணி கண்ட சிறந்த தொடக்க வீரரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், மற்ற சிஎஸ்கே வீரர்களை அவர்கள் குறி வைத்ததை கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய பாப் டு பிளஸ்ஸிஸ், இந்த பிரிவு குறித்து, வீடியோ ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் பேசும் டுபிளஸ்ஸிஸ், 'சென்னை அணிக்கு எனது நன்றி. ரசிகர்கள், ஊழியர்கள், அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நினைவுகளை அளித்துள்ளனர். இதனால், அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல, அனைவரையும் நான் மிஸ் செய்கிறேன். ஒரு கதவு அடைத்தால், வேறு வழி திறக்கும்.

இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். என்னிடம் இருந்தும், எனது குடும்பத்தினரிடம் இருந்தும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உருக்கத்துடன் டு பிளஸ்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை, சிஎஸ்கே அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டுபிளஸ்ஸிஸ் விலகிச் சென்றதால், வேதனையில் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள், இந்த வீடியோவைக் கண்டதும், அதிகம் மனம் வருந்திப் போயுள்ளனர்.