அமெரிக்காவில் காந்தியின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது.

குறித்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை அடுத்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் இச்சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.