பீட்சா, பர்க்கர் போல பாகிஸ்தானில் ஆன்லைன் மூலம் துப்பாக்கி டெலிவரி செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பாக்துன்வா மாகாணத்துக்குட்பட்ட தாரா அடம்கெல் பகுதியில் இருந்துதான் இந்த ஆபத்தான வியாபாரம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களுக்கு துப்பாக்கி தேவைப்படும் தனிநபர்கள், இணையதளம் மூலமாகவோ, செல்ஃபோனிலோ குறிப்பிட்ட முகவரை தொடர்பு கொண்டு ,தமக்கு எந்த ரக துப்பாக்கி தேவை என்பதை குறிப்பிட்டு முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் அடுத்த சில மணி நேரங்களில் துப்பாக்கி வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டுவிடுமாம்.

துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என்று செக் செய்துவிட்டு, ஆர்டர் கொடுத்தவர் மீதி பணத்தை கொடுத்தால் போதும். டீல் எளிதாக முடிவடைந்துவிடுமாம்.

துப்பாக்கி ஆர்டர் கொடுப்பவர்களிடம் அதற்கான லைசன்ஸ் இருக்கிறதா என்பதை கூட கேட்காமல், கண்மூடித்தனமாக நடைபெறும் இந்த வியாபாரம் குறித்து அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஆன்லைனில் துப்பாக்கி வாங்கிய ஒருவரின் பேட்டியுடன் செய்தி வெளியிட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.