தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது.

அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி, போர் மற்றும் பஞ்சத்தால் கடுமையான பதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள ஒரு நபர் தனது 10 வயது பெண் குழந்தையை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் தன் 5 குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இவரை போன்ற பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு போரால் அங்கு பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியாத சூழலில் நாடு சிக்கி தவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும், ‘வோர்ல்டு விஷன் உதவி அமைப்பின்’ தேசிய இயக்குனர் கூறுகையில்,

"இந்த நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது, குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.  ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க தங்கள் குழந்தைகளை விற்க தயாராக இருப்பதைக் கண்டு நான் மனம் உடைந்தேன்.

மிக இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணங்களை ஏற்பாடு செய்வது இப்பகுதி முழுவதும் அடிக்கடி நடக்கும் நடைமுறை.

மணமகனின் குடும்பத்தினர் இந்த திருமண ஒப்பந்தத்துக்கு பின் பணம் கொடுக்கிறார்கள், மேலும், குறைந்தது  15 அல்லது 16 வயது வரை அந்த குழந்தை தனது பெற்றோருடன் தான் இருக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி மற்றும் நிதி மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது”  என்று தனது ஆதங்கத்தையும் அங்குள்ள அவல நிலைவையும் தனது வர்த்தைகள் மூலம் கண்முன்னே கொண்டு வந்தார்.