அமீரகத்தில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் அபுதாபி, ராசல் கைமா பகுதிகளில் நடைபெற்ற பிரமாண்ட வாணவேடிக்கை, டிரோன் காட்சி நிகழ்ச்சிகளுக்கு 5 கின்னஸ் சாதனை விருதுகள் கிடைத்தது.

அமீரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

அதன்படி நேற்று துபாய் புர்ஜ் கலீபா பகுதியில் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதேபோல் துபாய் பிரேம், அய்ன் துபாய், குளோபல் வில்லேஜ் மற்றும் எக்ஸ்போ 2020 பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

இதையடுத்து, அபுதாபியில் ஷேக் ஜாயித் திருவிழா வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை மற்றும் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட கண்கவர் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. இதற்காக அந்த வளாகத்தில் 2 ஆயிரத்து 22 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது.

வானில் பறந்து சென்ற அந்த டிரோன்கள் வரிசையாக அடுக்கப்பட்டு முன்னாள் அமீரக அதிபர் மறைந்த ஷேக் ஜாயித், தற்போதைய அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோரின் உருவப்படமாக ஒளிர்ந்து பிரமிக்க வைத்தது.

அதேபோல் ஹேப்பி நியூ இயர் 2022 என ஆங்கிலத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறப்பட்டது.

அபுதாபியின் அல் வாத்பா பகுதியில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி இடைவிடாமல் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு நடத்தப்பட்டது.

இதற்காக அந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவு வாணவேடிக்கை, அதிக நேரம் மற்றும் வடிவம் ஆகியவற்றில் 3 முந்தைய சாதனைகளை முறியடித்து 3 புதிய கின்னஸ் சாதனை விருதுகள் அறிவிக்கப்பட்டது

மேலும், ராசல் கைமாவின் அல் மர்ஜான் தீவு பகுதியில் இடைவிடாது 4.7 கி.மீ தொலைவுக்கு 12 நிமிட நேர வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வாண வேடிக்கை செய்யப்பட்டதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 3463 அடி உயரத்திற்கு 452 டிரோன்கள் வானில்  உயரமாக பறக்க விடப்பட்டு ஆங்கிலத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ என எழுதப்பட்டது போன்ற காட்சி நடத்தப்பட்டது இதற்காக ஒரு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.