'என்ன சொல்ல போகிறாய்’ இசை வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
 
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அஸ்வின் பேசியது தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது

இந்த விழாவில் பேசிய அஸ்வின், 'என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது.

ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். அவ்வாறு 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன்.

நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான். இயக்குநர் ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டாடுவதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் பல பேரின் கனவு. கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் என பேசியுள்ளார்.

சினிமாவிற்கு புதுமுகமான அஸ்வின் 40 கதைகளை கேட்டு, எல்லாவற்றிலும் தூங்கிவிட்டேன் என பேசியுள்ளது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பலரும் அஸ்வினின் பேச்சை ட்ரோல் செய்து வருகின்றனர். சினிமாவில் வளர அடக்கம் மிக அவசியம் என அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.