இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இயந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு கூட ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பாகத்தான் உள்ளது.

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அந்த இயந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளதுதான்.

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது.

இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம்.

குறித்த இயந்திரம் அடுத்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.