யானைகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தும் வெடில் இளைஞன் ஒருவனின் வயிற்றில் பட்டதில் சம்பவ இடத்திலே இளைஞன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு-கல்மடு மலையடிவாரம் எனும் இடத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விகாராதிபதிக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இளைஞனின் வயிற்றில் யானைகளை விரட்டப்பயன்படுத்தும் வெடில் பட்டதில் வெலிகந்த பகுதியைச்சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விகாராதிபதி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்கைக அநுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இச்சம்மவம் நடைபெற்ற இடத்துக்குச்சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி ஈ.எல்.சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மரணித்த இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

மது போதையில் இளைஞர்கள் அட்டகாசம் புரிந்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.