ஒமிக்ரான் கொரோனா பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஓமிக்ரான்’ எனும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கவலைக்குரியவகையைச் சோ்ந்ததாக ஒமிக்ரானை உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது

இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும் வெளி நாடுகள் உடனான பயணத் தடை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ‘ஓமிக்ரான்’ பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ''பயணத் தடைகள் மூலம் ஓமிக்ரானின் சர்வதேச பரவலைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பயணத் தடைகள் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும்.

எதிா்காலத்தில் நோய்த் தொற்றுகளை எதிா்த்துப் போராட சா்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியாவசிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.