மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரிக்கை விடுத்து டெல்லி எல்லை சிங்குவில் இன்று 26வது நாளாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இன்றிலிருந்து உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

அதன்படி இதுவரை உடல்நலக்குறைவு, விபத்து மற்றும் கடும் குளிரால் இறந்துபோன 33 விவசாயிகளுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோன்ற உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் பஞ்சாபைச் சேர்ந்த டாட்டூ கலைஞர்களும் போராட்ட களத்திற்கு வந்து, அங்குள்ள விவசாயிகளுக்கு பஞ்சாப் வரைபடம் மற்றும் விவசாயம் சம்மந்தமான டாட்டூக்களை இலவசமாக வரைந்து வருகின்றனர்.

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டால், டிசம்பர் 23ஆம் திகதி விவசாயிகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும், அன்று நாடு முழுவதும் மக்கள் மதிய உணவைத் தவிர்த்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத் கேட்டுக்கொண்டுள்ளார்.