பெண்ணாடம் அருகே சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த ஒன்றறை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன்,தனலட்சுமி தம்பதியினர்.
இவர்களுக்கு 5 வயது மகனும் கிருபாஸ்ரீ என்ற ஒன்றறை வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவருக்கு உணவு தயார் செய்த தனலட்சுமி பெரிய பாத்திரத்தில் சாம்பார் செய்து கொதிக்கும் சூட்டோடு ஊற்றி சமையல் அறையில் வைத்துள்ளார்.
அவ்வேளை சமையல் அறையில் விளையாடிய கிருபாஸ்ரீ சூடாக இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்ததில் எதிர்பாராதவிதமாக கிருபாஸ்ரீ சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்து விட்டாள்.
இதனையடுத்து உடல் வெந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றறை வயது பெண் குழந்தை சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.