தைவான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1949 ஆம் ஆண்டு சீனாவும், தைவானும் பிரிந்தன.ஆனாலும், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடார்ந்து கூறி வருகிறது.

அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் போர் விமானங்கள் நேற்று தைவான் வான் எல்லைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 38 ஜே-16 போர் விமானங்கள், 12 ஹெச்-6 குண்டுகளை வீசும் விமானங்கள் உட்பட மொத்தம் 56 சீன விமானங்கள் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சீன போர் விமானங்களை இடைமறிக்கும் வகையில் தைவான் போர் விமானங்கள் செயல்பட்டன. மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய தினமான கடந்த 1 திகதி முதல் இதுவரை 148 விமானப்படை விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.