ஃபேஸ்புக் மற்றும் அதன் குழுமத்தில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் சேவைகள் உலகம் முழுவதும் நேற்றிரவு திடீரென முடங்கின. இதனால் இவற்றின் சில நூறு கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேர முயற்சிக்கு பின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 4 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின. எனினும் இந்த சில மணி நேர பாதிப்பு ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஃபேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால்மார்க் ஜுக்கர்பெர்க் கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துவிட்டது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில் அவர் 3ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஃபேஸ்புக்கின் விளம்பர வருவாயில் ஒரு மணி நேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் 6 மணி நேரத்திற்கு 42 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.