காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி தனது காதலரை எதிர்வரும் 26ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞருடன் நட்பாக பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

அதை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.பல நூற்றாண்டுகளாகத் தொடரும் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் இளவரசி. 

இது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில் மகோ மற்றும் கீ கோமுரோவின் திருமணம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேறவிருக்கின்றனர்.

அங்கு கொமுரு வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இந்த இளம் காதலர்கள் மீது அபரிமித ஊடக வெளிச்சம் பட்டதால், இளவரசி மகோ மன அழுத்தத்துக்கு ஆளானார் என்று ஜப்பானின் அரச குடும்ப விவகார முகமை கூறியுள்ளது.