கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதியினர் 2003இல் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கிற்கு 18 வருடங்களின் பின் தீப்பளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (25) ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் மற்றும் இவர், பி.இ. (கெமிக்கல்) பட்டதாரியாவார்.

இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். 

இதனையடுத்து இருவரும் கடந்த 2003 மே மாதம் 5ஆம் திகதி கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டு தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8ஆம் தேதி முருகேசனையும்,கண்ணகியையும் அழைத்து வந்துள்ளனர்.பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம்  போலீசில் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. 

அதன்பின்னர் விருத்தாசலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு 2004ஆம் ஆண்டு சிபிஐ பார்வைக்கு சென்றது.அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக இனங்கண்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

அந்தவகையில் கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, குணசேகரன் ஆகியோர் விடுதலை செய்யபட்டனர்.

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப் இன்ஸ்பெகடர்  தமிழ்மாறன்  ஆகியோர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு  தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.