ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து,

அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்திருந்தார்.

அதன்படி, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில், கடந்த மே 28ஆம் தேதி சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பேரறிவாளனுக்குத் தொடர் மருத்துவம் அளிக்கப்பட்டுவருவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட பரோல் காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்தார்.

அதை ஏற்ற தமிழ்நாடு அரசு, மூன்றாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.