”எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேன்” என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்தார். 

 

ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநரும், நடிகருமான பார்த்திபனுக்கு புதுச்சேரி அரசு சார்பில் 2019 ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் விருது வழங்க பார்த்திபன் அதனை பெற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த பார்த்திபன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். இது குறித்து அவர் கூறும் போது “ எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. என்னுடைய முதல் படத்திலிருந்து ஒத்த செருப்பு படம் வரை நிறைய அரசியல் பேசி வருகிறேன். விளிம்பு மனிதர்களுக்கான அரசியலை பேசுகிறேன்.

 

மேலும், அரசியல் மூலமாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா, அது ஒரு மனிதனின் சமூக அக்கறை. அது ஒரு கலைஞனுக்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் நிஜமாக எனக்கு நிறைய அக்கறைகள் இருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல வரும் காலத்தில் இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.