இங்கிலாந்தில் கடந்த மாதம் முதல் பொதுமக்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

 

முதலாவதாக ரஷியா புட்னிக்-5 தடுப்பூசியை தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய நிலையில், கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல், இங்கிலாந்தில், ஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

 

முதல்கட்டமாக முதியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

 

அதன்படி, முதல் தடுப்பூசி 90 வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு போடப்பட்டது. தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

 

இந்த நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதையடுத்து, ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஆனால், ஃபைசர் நிறுவனம், தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று விளக்கமளித்துள்ளது.