இந்தியா: தமிழ்நாடு

மதுரை ஊமச்சிகுளத்தில் இன்று திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு மக்கள் எழுச்சியை பார்க்கும்போது சு.வெங்கடேசன் 200 சதவீத வெற்றி நிச்சயம் என்று என்னால் சொல்ல முடிகிறது. இது பிரச்சாரக் கூட்டம் மாதிரி இல்லை, வெற்றி விழா கூட்டம் போல் இருக்கிறது. கடந்த தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள். ஆனால் இம்முறை குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பீர்களா?

தமிழ் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத பிரதமர் மோடி, யாரும் பேசாத சமஸ்கிருதத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வரிப் பணமாக 5 ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி கட்டியுள்ளோம். ஆனால் ஒன்றரை லட்சம் கோடியை மட்டும் தமிழகத்திற்கு திருப்பி வழங்கியுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்குகின்றனர்.

தமிழகத்திற்கு பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி நமது மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமையை பறிக்கின்றனர்.

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக இண்டியா கூட்டணி போட்டியிடும் 40க்கு 40 ஜெயித்து அவரது காலடியில் வைக்க வேண்டும். உங்களின் குரலாக ஒலிக்கும் சு.வெங்கடேசனை வாக்களித்து வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று உதயநிதி பேசினார்.