நியூஸிலாந்தில் ஏராளமான MNC-களுடன் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள். MNCகளில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வேலைசெய்த பிறகு, இருவரும் தங்கள் இலாபகரமான வேலைகளை விட்டுவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமான முயற்சியாக மாற்ற முயன்றுள்ளனர்.

ஒர்க் பிரஷரில் இருந்து தப்பிக்க மற்றும் நிம்மதியை தேடி பல மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தை முழுநேர தொழிலாகத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். பெரும்பாலும் IT துறையில் இருக்கும் மக்கள் விவசாயத்தை மாடர்ன் தொழில்நுட்பத்துடன் செய்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் பற்றிய செய்தியைத்தான் இப்போது நாம் காண இருக்கிறோம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் நியூஸிலாந்தில் கை நிறைய கிடைக்கும் சம்பாத்தியத்தை விட்டுவிட்டு 10 ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை செய்து வருகின்றனர். சச்சின் தர்பர்வார் மற்றும் ஸ்வேதா இருவரும் மென்பொருள் பொறியாளர்களாக நியூஸிலாந்தில் பணிபுரிந்தனர். அவர்கள் நியூஸிலாந்தில் ஏராளமான MNC-களுடன் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள். MNCகளில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வேலைசெய்த பிறகு, இருவரும் தங்கள் இலாபகரமான வேலைகளை விட்டுவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமான முயற்சியாக மாற்ற முயன்றுள்ளனர்.

தங்களது பல வருட IT அனுபவத்தை நல்ல நோக்கத்திற்க்காக செயல்படுத்த, தம்பதியினர் ஹைதராபாத்தில் உள்ள ஷமீர்பேட்டில் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினர். முன்னாள் மென்பொருள் பொறியாளர்கள் கிட்டத்தட்ட 150 வகையான காய்கறிகளை பயிரிட்டு உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு ‘சிம்ப்ளி பிரெஷ்’ என்ற முத்திரையுடன் வழங்குகிறார்கள்.
 

இது குறித்து சச்சின் தர்பர்வார் News18 இடம், "நாங்கள் நியூஸிலாந்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து இங்கே ஏதாவது செய்ய முடிவு செய்தோம். 'சிம்ப்ளி பிரெஷ்' என்ற யோசனை தோன்றியது. நாங்கள் இந்த பண்ணையை 2013 ஆம் ஆண்டில் சுமார் 10 ஏக்கர் விவசாய நிலத்துடன் தொடங்கினோம். இங்கு விவசாயத்தை தொடங்க நாங்கள் விரும்பியபோது, வணிக ரீதியான பிரேக்வென் குறித்து எங்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. பின்னர் எங்களுக்கிருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டோம். இன்று நாங்கள் பண்ணையிலிருந்து நகரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 8,000 கிலோ காய்கறிகளை வெற்றிகரமாக சப்ளை செய்து வருகிறோம். விதை விதைத்த முதல் நாள் முதல் அறுவடை வரை எங்கள் ஒவ்வொரு தாவரத்தையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து பல்வேறு காலநிலை நிலைமைகளின் கீழ் அவற்றின் ஊட்டச்சத்து தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற செயல்முறைகளை நாங்கள் கையாள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய ஸ்வேதா, “மேற்கண்ட முறையின் மூலம் நாங்கள் 2017-18 ஆம் ஆண்டில் எங்கள் பண்ணையிலிருந்து நல்ல வருமானத்தைப் பெறத் தொடங்கினோம். முதல் பண்ணை அளித்த உத்வேகத்தினால் பின்னர் தெலுங்கானாவின் அர்ஜுனபட்லாவில் சித்திப்பேட்டை அருகே மற்றொரு பண்ணையைத் தொடங்கினோம். இதன்மூலம் நாங்கள் ரூ 2 மில்லியனை திரட்டினோம். எங்கள் விவசாய நடவடிக்கைகளை 10 ஏக்கரிலிருந்து 150 ஏக்கராக விரிவுபடுத்தினோம். இரண்டு பண்ணைகளிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் கிலோ காய்கறிகளை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். AI- கட்டுப்பாட்டு தானியங்கி பசுமை இல்லம் (AI-controlled automatic greenhouses) மூலம் நாங்கள் எங்கள் செடிகளை வளர்க்கிறோம், அவை வானிலைக்கு ஏற்ப நன்றாக வளரும்.” என்று கூறினார்.

சச்சினும் ஸ்வேதாவும் இந்த பண்ணையிலுள்ள செடிகளுடன் ‘‘Talking to Plants’’ என்ற கருத்தின் அடிப்படையில் செடிகளை வளர்க்கத் தொடங்கினர். இந்த முறையின் மூலம், ஒரு தாவரத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கப்படுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி அதன் சுற்று சூழலும் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத சத்தான உணவை வழங்கும் நோக்கத்துடன் இந்த விசாலமான பண்ணையை சாத்தியமாக்குவதற்கு இரு விவசாயிகளும் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.