இலங்கை

நேற்றைய தினம் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச நீரிழிவு தினம் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இந்த பேரணி மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.

மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் உட்பட அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியின் நிறைவில் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நடைபெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன்,இலங்கையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் வளர்ந்தவர்களில் 4 பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.