இந்தியா: தமிழ்நாடு

சென்னை திமுக கிழக்கு மாவட்டத்தில் மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்பி பேசியதாவாது: பா.ஜ.க ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களின் கல்விக்காகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதத்தாலும், சாதியாலும் பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்காகவும் அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியது தி.மு.கதான். பெண்கள் கல்லூரிக்குச் செல்லவேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது உலகத்திற்கே வழிகாட்டியாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது உரிமையை அங்கீகரித்துள்ளார் முதலமைச்சர். இந்த திட்டத்தைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி தெரிவித்தார்.