நவீன ஓவியங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பாப்லோ பிக்காசோ வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் ரூ.1,157 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

வெறுமனே ஒரு பெண்ணின் உருவத்தை கொண்ட இந்த ஓவியம் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. யார் இந்த பெண்? ஏன் இந்த ஓவியத்திற்கு இவ்வளவு டிமாண்ட்? என்கிற கேள்விக்கான விளக்கத்தை இங்கே பார்க்கலாம். 

அதுவரை இயற்கை காட்சிகள் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்த தாள்களில், பிக்காசோ மனிதர்களை வரைய தொடங்கினார். தான் பார்த்த மனிதர்கள், பெண்கள், கைக்குழந்தைகள், வறுமை என அனைத்தையும் வரைய தொடங்கினார். இது பெரும் விவாதமாக ஆனதுடன் பலரும் இந்த ஓவியங்கள் குறித்து பேச தொடங்கினர். இப்படியாக பிக்காசோவின் ஓவியங்கள் பிரபலமடைய தொடங்கின.

இதனிடையே இவருக்கு காதலும் பிறந்தது. காதல் இல்லாத கலைஞன் எங்காவது உண்டா என்ன? மேரி தெரேஸ் வால்டர் எனும் 18 வயது இளம்பெண்ணை இவர் பாரிஸ் அருகே சந்தித்தார். இதுநாள் வரை இவர் வரைந்த மனித முகங்களை விட மேரியின் முகம் வித்தியாசமாக இருந்தது. ஒருமுறை பார்த்தால் அந்த முகத்தை அப்படியே பதிவு செய்து வைக்கும் இவரது தனித்தன்மை மேரியிடம் மட்டும் தோற்று போனது. பிக்காசோவால் இதை புரிந்துக்கொள்வே முடியவில்லை.

இந்த முகத்தை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் அந்த பெண்ணிடம் இது குறித்து கூறுகிறார். பின்னர் தினமும் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்த சந்திப்பின்போது மேரியின் முகம் அப்படியே பிக்காசோவின் மனதில் படிகிறது. நதியில் போட்ட கல்லை போல அது ஆழத்திற்கு செல்ல, காதல் மலர்கிறது. ஓவியத்தின் துரிகை மேரியின் முகத்தை அப்படியே பிரதிபலித்தது. கடந்த 1932ல் வரையப்பட்ட இந்த 'வுமன் வித் எ வாட்ச்' ஓவியம்தான் தற்போது ரூ.1,157 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

ஏறத்தாழ 90 ஆண்டுகள் கழித்து ஒரு ஓவியம் இவ்வளவு பெரிய விலைக்கு ஏலத்தில் விற்றிருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

பிற்காலத்தில் பிக்காசோ ஓல்கா எனும் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என்பது தனி கதை. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த எமிலி பிஷர் லாண்டவ் கலைகள் மீது, குறிப்பாக ஓவியங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்தான் பிக்காசோவின் மேற்குறிப்பிட்ட ஓவியத்தை வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்துதான் இது தற்போது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பிக்காசோ தான் வாழ்ந்த 78 ஆண்டுகளில் மொத்தம் 13,500க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். இதுதவிர 34,000 illustration எனப்படும் விளக்கப்படங்களையும் வரைந்திருக்கிறார். இவரது மொத்த ஓவியங்களிலும் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றுதான் மேரி தெரேஸ் வால்டரின் ஓவியம்.

நதியில் போடப்பட்ட கல்லின் குளிர்ச்சி அவ்வளவு எளிதில் ஒன்றும் போய்விடுவதில்லையே!