இந்தியா: தமிழ்நாடு

ஶ்ரீரங்கத்தில் நேற்று பாதயாத்திரையின் பொது பேசிய தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை, 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஶ்ரீரங்கம் கோவிலில் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள்" என ஒரு பலகை வைக்கப்பட்டதாகவும் மேலும் தமிழகத்தில் இருக்கிற எல்லா கோவில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும் என அவர் சூளுரைத்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியதற்கு இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது...

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையும் கடவுளை வணங்குபவன் முட்டாள் எனும் வாசகமும் அகற்றப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் செய்துள்ளார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். அண்ணாமலை பேசும் போது, ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் தந்தை பெரியார் வாசகம் அடங்கிய பலகை 1967 ல் வைக்கப்பட்டதாக கூறுகிறார்.

சிலை வைக்கப்பட்டதை தான் அப்படி சொல்லுகிறார். ஆனால்,தந்தை பெரியார் சிலை 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகா வைக்கப்பட்டது? முதலில், அது குறித்து பார்க்கலாம். 1969, ஜூன்20 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த தினவிழா கூட்டம் ஶ்ரீரங்கம் தெற்கு வாசல் கடை வீதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் பெரியாருக்கு சிலை வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நகர்மன்ற கவுன்சிலர் ராஜகோபால் அய்யங்கார் நகராட்சியில் முறைப்படி தீர்மானத்தை முன் மொழிகிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நகர்மன்றத் தலைவர் வெங்கடேஷ்வரா தீட்சிதர் தந்தை பெரியார் சிலை வைப்பதற்காக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 12 க்கு 12 எனும் அளவில் 144 சதுர அடி நிலம் ஒதுக்குகிறார். 1973ல் அரசாணை போடப்பட்டு 1975 ஆம் ஆண்டு அந்த நிலத்தை நகராட்சி, திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கிறது. நிலம் ஒப்படைக்கப்பட்டாலும் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ல் தான் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படுகிறது.

தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள் வெங்கடேஸ்வரா தீட்சிதரும் ராஜகோபால் அய்யங்காரும் தான். உண்மை இப்படி இருக்க அண்ணாமலையோ, 1967 ல் அமைக்கப்பட்டதாக சொல்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலைகளை அகற்றுவோம் என சொல்லுவது, ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சு வந்த கதை தான். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.