இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வந்த நிலையில், இப்போது அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் உதவிகளைப் பெறவும் பிணையக் கைதிகள் வெளியேறும் வகையிலும் சிறிய நேரத்திற்குப் போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போதிலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகச் சர்வதேச செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நெதன்யாகு...

காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களை முழுமையாக அழிப்பது தான் எங்கள் நோக்கம். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு தேவை. போர் முடிந்தாலும் கூட அதன் பிறகும் பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன்.

இங்கே உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உதவி பொருட்களைச் சென்றடைய அவ்வப்போது ஓரிரு மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும்.

பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரவும் இது போன்ற போர் நிறுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், முழு வீச்சில் போர் நிறுத்தம் என்பதில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது எங்கள் போர் யுக்தியை பாதிக்கும் என்றார்.