இந்தியா: தமிழ்நாடு

திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தொல்லை கொடுப்பதற்கென்றே செயல்படுவதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக் கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டிவிட்டாகள் என்றால் உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆவேசமாகப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.

ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஆளுநரை கடுமையாக விமர்சித்துப் பேசி சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஆர்.எஸ்.பாரதி, இப்போது நாகாலாந்து மக்கள் பற்றிப் பேசியிருப்பது கண்டனங்களை எழுப்பி வருகிறது.