இந்தியா: தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசன் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் மற்றும் கற்கள் வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது திடீர் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம் தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது , தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்