இலங்கை

இலங்கையின் மின்சார கட்டணத்தை 18 சதவீதத்தால் இன்று முதல் (20) அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பூச்சியத்தில் இருந்து 30 வரையான யூனிட்டுக்கு 150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணம் 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 31 இல் இருந்து 60 வரையான யூனிட்டுக்கு 300 ரூபாவாக இருந்த நிர்ணய கட்டணம் 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

61 முதல் 90 வரையான யூனிட்டுக்கான கட்டணம் 400 ரூபாயில் இருந்து 480 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், யூனிட் 91 இல் இருந்து 120 வரையில் 1000 ரூபாவாக இருந்த கட்டணம் 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

120 முதல் 180 வரையான யூனிட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1770 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், 180 யூனிட்டுக்கு மேற்பட்ட பாவனையாளர்களுக்கான நிலையான கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 2,360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டில் இலங்கையில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.