இலங்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பத்தில் உதவும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. அதன்படி, இலங்கை அரசாங்கம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பங்களில் உதவுவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர மருத்துவம், உணவு உள்ளிட்ட நலன் கருதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 8 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிவதுடன், அவர்களில் 90 சதவீதமானோர் முதியோர் இல்லங்களில், பராமரிப்பாளர்களாக பணியாற்றுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை இஸ்ரேலில் உள்ள இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.