இந்தியா: தமிழ்நாடு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (13) போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆசிரியர் சங்கங்களுடன் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். தனது முகாம் அலுவலகத்தில் இன்று காலை முதல் காத்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனால், ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நான் காலை 8 மணி முதல், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் போன் செய்து அழைத்தோம். இதுவரை எப்போதாவது, அமைச்சர் கையெழுத்து போட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து காத்திருந்ததைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று காலை 8.30 மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் என்னை சந்திக்க வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். 9 மணி வரை யாரும் வரவில்லை. காத்திருந்துவிட்டு இப்போது தான் பள்ளி நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன்.

மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதற்காக வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு மீண்டும் 10.30 மணி முதல் பேச்சுவார்த்தைக்காக காத்திருப்பேன். இன்று நாள் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன். பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.